| பல கோடி மோசடி - போலீசில் இளையராஜா புகார் | ![]() | ![]() | ![]() |
| Friday, 19 March 2010 06:43 |
எக்கோ இசைத்தட்டு நிறுவனம் தன்னை பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார் செய்துள்ளார். நேற்று இளையராஜா சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எக்கோ இசைத்தட்டு நிறுவனத்தின் மீது மோசடி புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எக்கோ நிறுவனம் தாம் இசையமைத்த பாடல்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது என்றும், ஆனால் அதற்கான ராயல்டி தொகையை தமக்கு அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இது போன்ற மோசடி கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை தாம் அந்த நிறுவனத்துடன் பேசியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதால் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசிவிட்டு அதன் அடிப்படையில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தற்போது எக்கோ நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒட்டுமொத்தமாக எல்லா பாடல்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது என்றும், அதன் காரணமாகவே தற்போது இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார். எவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி இப்போதைக்கு வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று கூறிய அவர், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது அதுபற்றி தெரியவரும் என்றார். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |