| நாடாளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் அறிக்கை விரைவில் தாக்கல் | ![]() | ![]() | ![]() |
| தேசியம் |
| Saturday, 13 November 2010 18:14 |
| ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் ஒரு சில நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை முறைகேடாக விற்றதன் மூலம் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராசா மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாவும் பிரதமர், சட்டத்துறை அமைச்சர், நிதியமைச்சரை மீறி அவர் செயல்பட்டுள்ளார் என்றும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதை ஜனாதிபதியின் பார்வைக்காக நிதியமைச்சகம் தற்போது அனுப்பி வைத்திருக்கிறது. கணக்கு தணிக்கை அதிகாரி கூறியது இறுதி தீர்ப்பு கிடையாது என்று மத்திய காங்கிரஸ் அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியிருக்கிறார். ராசாவை பொருத்தவரை அவர் குற்றவாளி அல்ல என்று தமிழக முதல்வர் கருணாநிதியும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பல லட்சம் கோடி முறைகேடு செய்த அமைச்சர் ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஒரு சில நாட்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு, ராசா விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |