இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் கே.எல்.ராகுலுக்குப் பதில் களமிறங்கிய கில் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ குணமான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இரண்டாவது நாளை தொடங்கிய கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் சற்று பொறுமையாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். 19 ரன்கள் எடுத்திருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார். அதன் மூலம் இன்றைய நாளில் இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. அடுத்து கேமரூன் கிரீன், உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
அஷ்வின் – உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணியின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ஆஸ்திரேலியா அணி 11 ரன்களில் மட்டுமே கடைசி ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 197 ரன்கள் எடுத்து 88 ரன்கள் முன்னிலையில் இருந்தது ஆஸ்திரேலியா அணி.
அடுத்து, இந்திய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸை ரோஹித் சர்மா, கில் ஆகியோர் தொடங்கினர். நாதன் லயனின் அபாரமான சுழல் பந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். லயன் பந்தில் கிளீன் போல்டாகி ஐந்து ரன்களில் நடையைக் கட்டினார் கில். மீண்டும் லயனின் அசத்தலான ஸ்பின்னில் ரோஹித் சர்மா எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.