லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் லயனோடு கைகோத்து 200 ரன்களை நோக்கி கவாஜா ஆடிக் கொண்டிருந்தார். 140.3 ஓவரில் 400 ரன்களைத் தொட்டது ஆஸ்திரேலியா. பல மணி நேரங்களாக இந்திய பௌலர்களைத் திணற வைத்த கவாஜாவின் விக்கெட்டும் ஒரு வழியாக விழுந்தது. தேநீர் இடைவெளிக்குப்பின் முதல் பந்திலேயே கவாஜாவின் விக்கெட்டை அக்சர் படேல் வீழ்த்தினார். டிஃபன்ஸ் ஆட முற்பட்டபோது எல்.பி.டபுள்யூ ஆனது. ரிவ்யூ எடுக்க, அது இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. இறுதியாக, கவாஜாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிறப்பாக விளையாடி 422 பந்துகளில் 180 ரன்கள் குவித்திருந்தார் கவாஜா. இந்திய மண்ணில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடிக்கும் இடதுகை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கவாஜா.

வேகமாக அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லயன் – மர்ஃபி கூட்டணி கடைசி நேரங்களில் அதிரடி காட்டியது. இது இந்திய பௌலர்களுக்குத் தேவையில்லாத அழுத்தத்தை கொடுத்தது. இந்தக் கூட்டணி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தது.

34 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த மர்ஃபியை எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆக்கினார் அஷ்வின். இதன் மூலம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தனது 32வது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின்.

அஷ்வின்

அஷ்வின்
பிசிசிஐ

இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வலுவான ஸ்கோராக 480 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்தது. மூன்றாவது செஷனில் இந்தியா பேட்டிங் செய்ததற்கு அஷ்வினின் பந்து வீச்சு முக்கியமான காரணமாக அமைந்தது. கடைசி செஷனில் 10 ஓவர்கள் மீதம் இருந்தன. இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோஹித் சர்மா – கில் களமிறங்கினர். பத்து ஓவர்களில் விக்கெட் விடாமல் ஆடினாலே என்று எதிர்பார்த்தனர். இருப்பினும் ரோஹித் சர்மா பவுண்டரிகளை விளாசி பெரிய இலக்கிற்கான நம்பிக்கையை விதைத்தார். கில்லும் கடைசி ஓவரில் லயன் பந்தில் அபாரமாக லெக் சைடில் சிக்ஸர் ஒன்றை அடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை எடுத்தது. ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 444 ரன்கள் பின்னடைவில் உள்ளது.



Source link