முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாட வனத்தில் ஆண் யானை உயிரிழந்து கிடந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நீலகிரி கிழக்கு சரிவு சரகம், தெங்குமரஹாடா பிரிவுக்குட்பட்ட மங்கலபட்டி பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று மாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையோரம் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து துணை இயக்குநர் அருண்குமார், வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் டி.வெங்கடேஷ் ஆகியோருக்கு வன ஊழியர்கள் தகவல் அளித்தனர். அவர்களின் ஆலோசனையின்படி பிரேத பரிசோதனை நடைபெற்றது.
வனத்துறையினர் கூறும் போது, ’யானையின் உடல் அழுகியிருந்தது. இதனால், யானை இறந்த பல நாட்களாகியிருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பின்னரே யானை உயிரிழந்த காரணம் தெரிய வரும்’ என்றனர்.