பழநி: சீசன் தொடங்கியுள்ளதையொட்டி, பழநியில் வாட்டர் ஆப்பிள் அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனையாகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடி, தடியன்குடிசை மற்றும் ஊட்டி, குற்றாலம் பகுதிகளில் வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகிறது. வெண்மை மற்றும் இளஞ் சிவப்பு நிறத்தில் இப்பழங்கள் உள்ளன. ஒரு பழம் சுமார் 30 கிராம் எடை உடையது. இப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.

தற்போது சீசன் என்பதால், கொடைக்கானல் மற்றும் குற்றாலம் பகுதிகளில் இருந்து பழநி பகுதிக்கு இப்பழம் அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகள், நீர்ச்சத்துமிக்க இந்த வாட்டர் ஆப்பில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். இனிப்பு சுவை குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் விரும்பி வாங்குகின்றனர். வரத்து அதிகரித்தால் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது, என்றனர்.





Source link