பா.ஜ.க ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள், அந்த மாநில அரசுகளுக்கு எதிராகச் செயல்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் ஆளுநருக்கெதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்த பிறகு, பல நாட்களாக கிடப்பில் இருந்த அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென ஒப்புதல் அளித்தார்.

அதேபோல தெலங்கானாவிலும் ஆளுநரால் மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டதால் ஆளுங்கட்சி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றதையடுத்து, மூன்று மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தனித் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு பா.ஜ.க அல்லாத மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.