டாக்டர் விகடன்: எனக்கு வயது 51. கடந்த சில வருடங்களாக உணவு உண்டதும் உணவுக்குழாய் எரிச்சலை உணர்கிறேன். பசி உணர்வே இல்லாமல் இருக்கிறது. பசி இல்லாததும், உணவுக்குழாய் எரிச்சலும் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா…. இதற்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா.

உணவுக்குழாய் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ள எரிச்சலின் பின்னணி பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். நமக்கு இரைப்பையும் உணவுக்குழையும் அருகருகே இருக்கும். இரைப்பையில் அமிலம் இருக்கும். ஆனால் உணவுக்குழலில் அமிலம் இருக்காது. உணவுக்குழாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் ஒரு வால்வு இருக்கும். உணவானது உள்ளே போகும்போது அது எதிர்த்திசையில் வாயை நோக்கி வராது. ஒருவர் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு, தலைகீழாகத் தொங்கினால்கூட சாப்பிட்ட உணவானது வெளியே வராது. அதற்கு அந்த வால்வுதான் காரணம்.
சிலருக்கு இந்த வால்வு பலவீனமாக இருக்கலாம். அதிக உடல் எடை கொண்டவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், ஒன்றுக்கும் மேலான பிரசவங்களை எதிர்கொண்டவர்கள் போன்றோருக்கு இந்த வால்வு சற்று தளர்ந்து போயிருக்கலாம். இவர்களுக்கெல்லாம் உணவானது எதிர்த்திசையிலும் வரலாம். அதனால் இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய்க்கு வருவதால் எரிச்சல் ஏற்படுகிறது. இது மிகவும் பரவலான பிரச்னைதான்.