சென்னை: சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் 1.26 லட்சம் டன் கச்சா எண்ணெய் கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்துக்கு வெளிநாட்டில் இருந்து எம்.டி.கசாஸ் என்ற சரக்குக் கப்பல் மூலம், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது. இது, ஒரே நாளில் கையாளப்பட்டு கப்பலில் இருந்து இறக்கப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த ஆண்டுஏப்.14-ம் தேதி எம்.டி.மராத்தி என்ற சரக்குக் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 300 டன் கச்சா எண்ணெய் ஒரே நாளில் கையாளப்பட்டதே இதுவரை சாதனை அளவாக இருந்தது. தற்போது அதைவிட அதிக அளவு கச்சா எண்ணெய் கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், ஏஜென்ட் அட்லாண்டிக் குலோபல் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சென்னைதுறைமுக தலைவர் சுனில்பாலிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.