கலிஃபோர்னியா: கூகுள் சிஐஓ சுந்தர் பிச்சையின் சம்பளம், இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. கூகுள் தேடுபொறியின் தாய் நிறுவனம் Alphabet Inc. கடந்த 2022ஆம் ஆண்டு இதன் சிஐஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பேற்றார். இந்நிலையில், சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு சம்பள விவரம் இணையத்தில் வெளியாகி, விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே கூகுள் நிறுவனம் பலகட்டமாக ஊழியர்களை லே ஆஃப் செய்து வருகிறது. சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு சுமார் 226 மில்லியன் டாலர் மதிப்பிலான சம்பளத்தை வாங்கியதாக நிறுவனம் நேற்று (ஏப்.21) தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1800 கோடியாகும் இது கூகுள் நிறுவனத்தில் மத்திய வரிசை ஊழியர்களின் சம்பளத்தைவிட 800 மடங்கு அதிகமாகும். இதுதான் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
செலவுக் குறைப்பு என்று கூறி பல்லாயிரம் ஊழியர்களை வெளியேற்றும் சூழலில் ஒரு தனிநபரின் சம்பளம் இவ்வளவு அதிகமாக இருக்கிறதே என்று கண்டனக் குரல்கள் கிளம்பியுள்ளன. கடந்த மாதம் ஜூரிச் நகரில் 200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து கூகுள் ஊழியர்கள் பலரும் வெளிநடப்பு செய்தனர்.