அமெரிக்காவில் இரண்டு திருடர்கள் காஃபி ஷாப் வழியாக ஆப்பிள் ஸ்டோரின் பின்புறச் சுவரைத் துளையிட்டு ஐபோன்களைத் திருடிச் சென்று `ஐபோன் ஹெயிஸ்ட்’ சம்பவத்தை அரங்கேற்றியிருக்கும் நிகழ்வு பலருக்கும் ஆச்சர்யத்தையும், ஆப்பிள் ஸ்டோர் உரிமையாளருக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஐபோன்

சியாட்டிலின் ஆல்டர்வுட் மாலிலுள்ள ஆப்பிள் ஸ்டோரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் திருடர்கள், ஆப்பிள் ஸ்டோரின் பின்புறமாக இருக்கும் காஃபி ஷாப் ஒன்றில் நுழைந்து, அங்கிருக்கும் கழிவறையின் சுவரில் பெரிய துளையை ஏற்படுத்தி அதன் வழியாக ஆப்பிள் ஸ்டோருக்குள் நுழைந்து ஐபோன்களைத் திருடிச் சென்றிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் வேலைக்குத் திரும்பும்வரை திருடப்பட்ட பொருள்கள் குறித்து எந்த விவரங்களும் வெளிவரவில்லை. பின்னர் இது போலீஸுக்குத் தெரியவரவே, உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் நடந்த இடம்

இது குறித்துப் பேசிய லின்வுட் காவல்துறையின் தகவல் தொடர்பு பிரிவின் அதிகாரி மரேன் மெக்கே (Maren McKay), “திருடர்கள் முகமூடி அணிந்துகொண்டு உள்ளே நுழைந்திருக்கின்றனர். தோராயமாக 436 ஐபோன்கள் களவாடப்பட்டிருக்கின்றன. இதுவரை கைரேகை உள்ளிட்ட எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. யாரும் கைதுசெய்யப்படவுமில்லை. ஆனால், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார். களவாடப்பட்ட ஐபோன்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4.1 கோடி என்று கூறப்படுகிறது.

மேலும் காஃபி ஷாப் தரப்பிலிருந்து, தங்கள் கடையின் பூட்டுகளை சுமார் 900 டாலரும், கழிவறையைச் சரிசெய்வதற்கு 600 முதல் 800 டாலரும் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



Source link