புதுடெல்லி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட தொல்காப்பியம் மீதான கருத்தரங்கில் உலகின் பழமையான மொழி தமிழ் என்று, அலிகர் முஸ்லிம் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம் அலிகரில் அமைந்திருப்பது அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம். 1875-இல் சர் சையது அகமது கானால் நிறுவப்பட்டது, இது நாட்டின் பழமையான மத்தியப் பல்கலைகழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைகழகத்தின் சார்பில் அதன் வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ, சென்னையின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தினார். இது இணையவழியில் நடைபெற்றது.

நேற்றுடன் முடிந்த இந்த ஆய்வுக் கருத்தரங்கு, ‘மத்திய தொல்காப்பியம் மற்றும் செம்மொழித் தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பு’ எனும் தலைப்பில் நடைபெற்றது. இணைய வழியில் நிகழ்ந்த இக்கருத்தரங்கை, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முகம்மது குல்ரெஸ் துவக்கி வைத்தார்.

இதன் நிறைவு விழாவில் அப்பல்கலைக்கழகத்தின் இந்தி மொழித்துறை தலைவர் பேராசிரியர் ஆசிக் அலி மற்றும் சமூகவியல் துறைகளின் புலத்தின் டீன் பேராசிரியர் மிர்சா அஸ்மர் பேக் ஆகியோர் கலந்துகொண்டனர். வட மாநிலப் பேராசிரியர்களாக இவர்கள் அனைவரும் தங்கள் உரைகளில், உலகின் பழமையான மொழி தமிழ் என்று ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் முகம்மது குல்ரெஸ், ”இதுபோன்ற கருத்தரங்குகளால் இந்தியாவின் பன்முக மொழிகளை புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக உலகின் பழமையான மொழியான தமிழின் பழம்பெரும் இலக்கியமாக தொல்காப்பியம் இருப்பது அறிந்துகொள்ள முடிந்தது.” எனத் தெரிவித்தார்.

முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்ட சமூகவியல் துறைகளின் புலம் டீனான பேராசிரியர் மீர்ஸா அஸ்மர் பேக், ”இந்த கருத்தரங்கால் செம்மொழிகளின் பெருமைகள் மீதான விழிப்புணர்வை வட மாநிலத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உலகின் பழம்பெரும் மொழியான தமிழின் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதன்மூலம், ஒவ்வொருவரும் இதர மொழிகளை மதிக்கும் உணர்வு உருவாகிறது.” எனத் தெரிவித்தார்.

இதன் நிறைவுவிழாவில் வாழ்த்துரை வழங்கிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக இந்தி மொழித்துறை தலைவரான பேராசிரியர் ஆசிக் அலி, ”மொழிபெயர்ப்புகள் மீதான இந்தவகை கருத்தரங்குகளால், இளம் ஆய்வு மாணவர்கள் மிகவும் பயனடைகின்றனர்.

உலகின் பழமையான மொழியாக தமிழ் இருப்பதால் அதனை மற்ற மொழிகளுடன் ஒப்பாய்வு நடத்தலாம். வட மாநிலக் கல்விநிலையங்களில் வரவேற்கக் கூடியன” எனத் தெரிவித்தார்

இந்தியாவின் மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கு இடையே எது பழமையானது? எனும் போட்டி நீண்ட காலமாக நிலவுகிறது. இவற்றில் உலகின் பழமையான மொழி தமிழ் என பல வெளிநாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் இக்கருத்து, இந்தியாவின் தமிழ் அல்லாத இதர மொழி அறிஞர்களால் இதுவரை ஒப்புக் கொள்ளப்பட்டதில்லை. இப்பிரச்சனையில், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் கடந்த நவம்பரில் நடைபெற்ற’ காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் முதன்முறையாக ஒரு முயற்சி எடுக்கப்பட்டது.

இதன் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ” துவக்கஉலகின் பழமையான மொழி தமிழ்’ என முதன்முறையாகக் குறிப்பிட்டார். இதையடுத்து அவர், பள்ளிக் குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சியிலும், ‘உலகின் பழமையான மொழியான தமிழ், இந்தியாவில் இருப்பது அனைவருக்கும் பெருமை.” எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து குஜராத்தில் முடிந்த, ‘சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியின் நிறைவுவிழாவிலும் பிரதமர் குறிப்பிட்டார். இதையடுத்து, பேராசிரியர்கள் இடையே முதன்முறையாக இது, தொல்காப்பியம் கருத்தரங்கில் வெளியாகி உள்ளது.

வட மாநிலங்களில் முதல் குரலாக, பிரதமர் மோடியின் கருத்தை வெளியிட்டாலும் கல்வியாளர்கள் மத்தியில் இது எழுந்ததில்லை. இச்சூழலில்,தொல்காப்பியம் மீதான இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கில் முதன்முறையாக வட மாநிலப் பேராசிரியர்களால் ஏற்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் மேலும் வட மாநிலங்களின் பல கல்வி நிலையங்களிலும், மொழி அறிஞர்களுக்கு இடையேயும் தமிழ் உலகின் பழமையான மொழி எனும் கருத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கு செம்மொழி தமிழாய்வு மத்திய பேரவை இணைந்து நடத்தப்பட்டது. இதன் அமைப்புச் செயலாளராக அலிகர் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை எஸ்.சாந்தினிபீ, மற்றும் அமைப்பாளராக செம்மொழி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் ஆகியோர் இருந்தனர்.

பழம்பெரும் தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்தின் இந்திய மொழிபெயர்ப்பு, மத்திய நிறுவனம் சார்பில் தற்போது வெளியிடப்பட்டது. ஒரே தொகுப்பாக அமைந்துள்ளது, இந்திய அரசின் அதிகாரபூர்வ இந்த மொழிபெயர்ப்பாகக் கருதப்படுகிறது.

இந்தி ஆங்கில மையமாக்கி நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், ஜெர்மனி, தான்சானியா, மலேசியா, இலங்கை நாடுகளின் பேராசிரியர்களுடன் இந்தியாவின் பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.





Source link