மும்பை: பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 21 புள்ளிகள் சரிவடைந்து 60,278 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து 17,804 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே தொடங்கின. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 88.73 புள்ளிகள் உயர்வடைந்து 60,389.31 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5.85 புள்ளிகள் உயர்ந்து 17,819.45 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல், ஏப்ரல் மாதத்திற்கான எஃப் அண்ட் ஓ பங்குகள் இன்று காலாவதியாவது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி வர்த்தகத்தை தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் உயர்வில் இருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், டிசிஎஸ், விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, ஈசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.





Source link