கோவை சூலூரில் நடைபெற்ற காவல்துறை அதிகாரியின் இல்லத் திருமண நிகழ்வில் மதகுருமார்கள் இணைந்து சிவபுராணம் மற்றும் இஸ்லாமிய முறைப்படி மணமக்களை வாழ்த்திய நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகக் காவல்துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்னைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் இந்த பிரிவில் குடியரசுத் தலைவர் விருது மற்றும் அண்ணா விருதைப் பெற்றுள்ளார்.

இதனிடையே அவரின் இல்லத் திருமண விழாவில் எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் மும்மத குருமார்கள் முன்னிலையில் தனது மகளின் திருமண வரவேற்பை நடத்தியுள்ளார். வெற்றிச்செல்வனின் மகள் நிஷாந்தினிக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் கோவை சூலூர் பகுதியில் தனியார் அரங்கில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கௌமார மடாலயம் குருமகா சந்நிதானம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம், சுன்னத் ஜமாஅத் தலைவர் மெளவி அல்லாஜ், காவல்துறை இயக்குநர்கள் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்: நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்… மாணவி கன்னத்தில் கேக் தடவிய இளைஞர்கள்… தட்டி தூக்கிய போலீஸ்…!

தொடர்ந்து, மேடையில் மதகுருமார்கள் மணமக்களை சிவபுராணம் வாசித்து வாழ்த்தினர். அதேபோல இஸ்லாமியக் குருமார்கள் இஸ்லாமிய முறைப்படி மணமக்களை வாழ்த்தினர்.



Source link